தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க வாருங்கள்....: அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் ...
Friday, November 23, 2012
Thursday, November 22, 2012
காவியாக வெளுத்த சிவப்பு - தா.பாண்டியனின் ஃபாசிச முகம்
எல்லா நாட்களையும் போலவேதான் இந்த நாளும்
விடியும் என்ற நம்பிகையில் உறங்கச் சென்ற போதிலும் இன்றைய நாள் எனது பல
நம்பிக்கைகளைத் தகர்த்த நாள்.
காலையிலேயே தமிழகத்தின் முக்கிய அமைப்பின்
தலைவர் ஒருவர் போன் செய்து, 'தம்பி! கசாப் தூக்கிலிடப்பட்டார் என்று
செய்திகள் வருகிறது. நான் வெளியில் இருக்கிறேன். உறுதிபடுத்திச் சொல்'
என்றார். அதிர்ச்சிகரமான செய்தி. சனியன் கரண்டு வேற இல்லை. தோழர்
சதீஸ்க்குப் போன் செய்து செய்தியைக் கூற, 'இருங்கள் அண்ணா! இணையத்தில்
பார்த்து சொல்கிறேன்' என்று கூறிவிட்டு செய்தியை உறுதிப்படுத்தினார்.
எரவாட சிறையில் அஜ்மல் கசாப் காலையில் தூக்கிலிடப்பட்டார்.
அவசர கோலத்தில் நடை பெற்ற இந்த
சட்டப்பூர்வமான கொலை, அதற்குப் பின் இருக்கும் அரசியல், தமிழக உணர்வாளர்களை
அச்சுறுத்தும் அரசியல் இப்படி பல வெங்காயங்களை யோசித்துக்கொண்டு அலுவலகம்
சென்றேன்.
காலை முதல் ஊடகங்கள் இந்தியாவுக்கு
விடுதலை கெடச்சிருச்சு என்ற ரேஞ்சில் அலறிக்கொண்டிருந்தன. தேசபக்தியின்
அளவுகோலே அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதை வரவேற்பதில்தான் இருக்கிறது என்ற
ரீதியில் அரசின் திரைக்கதைக்கு கனகச்சிதமாக நடித்துக் கொண்டிருந்தார்கள்
ஊடக பயங்கரவாதிகள்.
ஒரு திரைப்படம் என்றால் காமெடியன்களும் பபூன்களும் இல்லாமலா?
தமிழகத்தின் முன்னாள், இன்னாள் அரசியல்
காமெடியன்கள், காவி காமெடி, காங்கிரசு காமெடி, பச்சை காமெடி, மஞ்ச காமெடி
என விதவிதமாக பர்பாமன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்க…
தன் கட்சிக்காரன் கொலை வழக்கில்
குண்டாசில் உள்ளிருக்க, அம்மாவின் மனம் நோகாமல் நோம்பி கும்பிடும் தப்புத்
தாளம் தா.பாண்டியன், மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிக்க
பழக்கப்படுத்திகொண்ட ஜி.ராமகிருஷ்ணன்கள் என வரிசை கட்டி நிற்க ஒரே
அதிர்ச்சிதான் போங்க... 'நல்லவியங்களுக்கு இங்கே என்னடா வேலை' என மனித
உரிமை பேசியே வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்களை அதிர்ச்சியாய்ப்
பார்க்க வைச்சாங்க பாருங்க...
அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை வரவேத்தாங்க.. சரி அது ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட கதை வசனம்.. அத உட்டுருவோம்.
அதுக்கு மேலதான் தா.பாண்டியன் பேசிக்
கொண்டிருக்கும்போது நான் உத்து உத்து டிவியின் கீழ் வரும் எழுத்தைப்
பார்த்தேன். ஆர்.எஸ்.எஸ்.ல் தா.பாண்டியன் சேர்ந்து விட்டாரோ என்று.. ஆனால்
மாநிலச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சின்னுதான் வந்தது.
முஸ்லீம்கள் வழிபாட்டுத் தளங்களில்
குண்டுவைத்தவர்கள்; தீவிரவாதிகள். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க
வேண்டும் என பேசிக்கொண்டே போனார். அப்படியே அவர் உருவில் நரேந்திர
மோடிகளும், எச்சி ராஜாக்களும், ராமகோபாலன்களும் வந்து போனார்கள்.
தா.பாண்டியன் அவர்களே!
இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த பல
குண்டுவெடிப்புகளுக்கு காரணம் யார் என்று தெரிந்தும் முஸ்லீம்கள் மேல் பலி
போடும் துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது?
அஜ்மீர் குண்டுவெடிப்பு, ஜம்தாவி ரயில்
குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு என இன்னும் பல குண்டுவெடிப்புகள்
இந்துத்துவ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக
நிரூபிக்கப்பட்டு அந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும்
வேளையில் அந்த நிகழ்வுகளுக்கு முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் உங்களை
இந்துத்துவத்தின் மறுஉருவமாகவே நாங்கள் பார்க்கிறோம்.
இந்த நாட்டில் எங்கு எது நடந்தாலும்
உடனடியாக முஸ்லீம்களின் மீது பலி சுமத்துவதும், இந்திய முஸ்லீம்களை
பாகிஸ்தானியர்களுக்கு சேவகம் செய்பவர்களாக சித்திரிப்பதும், ஒரு சமுகத்தையே
குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதும் இந்திய உளவுத் துறை மற்றும் இந்துத்துவ
பாசிச பயங்கரவாதிகளின் செயல்திட்டங்களில் ஒன்று. அவர்களின்
செயல்திட்டங்களுக்கு அவர்களின் திரைக்கதைக்கு நடிக்கும் புதிய காமெடியனாக
இப்போது நீங்கள்.
சிறுபான்மை மக்களை முரண் சக்திகளாக
முன்னிலைப்படுத்துவதில் அனைவரும் ஓர் அணியில். இதில் காவி என்ன...
போலிகம்யூனிஸ்ட் என்ன..? எல்லா அப்பன்களும் ஒரே குட்டையில் ஊறிய
மட்டைகள்.... என்று இன்றைய தினம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமுகம் பல விடயங்களில் மார்க்க
ரீதியாக கம்யூனிஸ்டுகளிடம் முரண்பட்டாலும் சனநாயக உரிமைகளுக்காக, மனித
உரிமைகள் போற்றுவதில் தங்களின் அரசியல் பாதுகாவலர்களாக கம்யூனிஸ்டுகளைப்
பார்க்கும் வேளையில் உங்கள் அரசியல், இந்துத்துவ அரசியலை நோக்கி
போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து முஸ்லிம்கள் இன்றைய தினம் பெரும்
அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியா சனநாயக நாடு என்று உலக அரங்கில்
போலியாக நம்ப வைத்துக் கொண்டிருந்தாலும் அதன் கோர முகம் இன்றைக்கு
அம்மணமாக இளித்துக் கொண்டிருக்கிறது. சனநாயகத்திற்கும் மனித
உரிமைகளுக்கும் சவால்விடுவதாக அதன் செயல்கள் இன்றைக்கு அமைந்திருக்கின்றன.
உலக நாடுகள் சபையில் நேற்றைய தினம் மரண தண்டனைகளுக்கு எதிரான தீர்மானம்
கொண்டுவரப்பட்டபோது அதை மூர்க்கமாக எதிர்த்த நாடுகளில் ஒன்றாக இந்தியா
மாறியபின்னர், அது மனித உரிமைப் போராளிகளை, மரண தண்டனைக்கு எதிராக
போராடுபவர்களை நோக்கி சவால்களும், எச்சரிக்கையும் விடும் நோக்கில்
இன்றைக்கு அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
உலக அளவில் மரண தண்டனைக்கு எதிராக
நிற்கும் நாடுகளின் முன் திமிராக 'நேற்று அந்த வரைவுத் தீர்மானம் வெற்றி
பெற்றிருக்கலாம். ஆனால் மரணத்தையும், மரண தண்டனைகளையும் நாங்கள் முடிவு
செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியும்?' என்ற இந்தியாவின் கொக்கரிப்பைப்
பார்க்க முடிந்தது.
இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் காங்கிரசின்
ஒரு பிரிவாக இருந்த வரலாறும், அதிலும் நீங்கள் மஞ்சள் கம்யூனிஸ்டாக
காங்கிரசின் சிறுபான்மைப் பிரிவு கம்யூனிஸ்டாக இருந்ததை நாங்கள்
மறக்கவில்லை. உங்கள் நிறம்தான் தற்போது சிவப்பு என்றாலும் அதில் ஊடுறுவிப்
பார்த்தால் அது காவியாக வெளுத்துள்ளதையும் இனிவரும் காலங்களில் நாங்கள்
உணர்ந்திருப்போம்.
உங்கள் காவி சிந்தனையை இனியும் தொடர்ந்து காட்டினால் வரலாற்றில் மிகக் கேவலமான பக்கங்களில் உங்கள் பெயர் எழுதப்படும்.
- உமர்கயான், முதன்மை ஒருங்கினைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம், தமிழ்நாடு
Wednesday, November 21, 2012
அரச பயங்கரவாதத்திற்கு எதிராக திருப்பூரில் அணி திரள்வீர் - செப்டம்பர் 25
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 14 உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அரசியல் சட்டப்படி ஆட்சியதிகாரம் நடக்கிறதா என்றால் சனநாயகம் இங்கே கேலிக்குரிய வடிவில் அரங்கேறி வருவதைப் பார்க்கமுடியும். அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்குகளில் அரசியல் சட்டத்தை எந்த அரசும் அரசு அதிகாரிகளும் மதிப்பதில்லை. இவர்கள் திட்டமிட்ட சதியின் அடிப்படையில் இசுலாமியர்களுக்கு எதிரான பொய் வழக்குகளை புனைவதிலும், சட்ட விரோத கைதுகளை மேற்கொள்வதிலும், தீவிரவாதிகளாகவும் , பயங்கரவாதிகளாகவும் சித்தறிப்பதிலேயுமே முனைப்பு காட்டுகிறார்கள்.
முஸ்லிம் அல்லாதவர்கள் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க "முஸ்லிம் தீவிரவாதிகள்", "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்" என்று இஸ்லாமிய சமூகத்தையும், மக்கள் போராளிகளையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் நாடகத்தை ஊடகங்கள் செய்தது போக இன்று அரசே அதன் எந்திரங்களை கொண்டு நடத்தி வருகிறது. இது இவர்களுக்கு கைவந்த கலை.
திரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா.. எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல்அவதூறான களங்கத்தைச் சுமத்திச் சென்றுவிடுகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா?
இன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் நடக்கும் வன்செயல்கள், அராஜகங்கள், தீவிரவாத செயல்கள், மனித நேயத்திற்கு முரணான செயல்கள் இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். முஸ்லிம்கள் மட்டும்தான் அச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? இல்லையே! ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களிலும் இப்படியொரு அராஜாக - மிருகவெறி கொண்ட கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த, ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஒரு போதும் ஈடுபடமாட்டார். தற்கொலை செய்து கொண்டு தன்னை மீளா நரகில் கொண்டு சேர்க்க ஒரு போதும் முற்படமாட்டார். தீமையை தீமையைக் கொண்டு தடுக்க முடியும் என்று அல்குர்ஆன் சொல்லவில்லை. தீமைகளை நன்மைகளைக் கொண்டே முறியடியுங்கள் என்றே குர்ஆன் போதிக்கிறது.
ஒரு நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் அரசு, அரசு அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் இந்த நான்கும் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நிலைகுழைந்தால் நாட்டில் கற்பழிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, தீவிரவாதம் என அனைத்து அராஜகங்களும், பஞ்சமா பாவங்களும் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று இந்த நான்கு தூண்களும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றன.
இல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள். துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை. இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லை. இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக பிறருக்கு சொன்னால் போதும் என்கின்ற மனநிலையில் பெரும்பான்மையினர் ஒதுங்கிவிடுகின்றனர். இன்னும் இயக்கங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒற்றுமையின்றி போராடிக்கொண்டிருக்கின்றன அதனால் நமது வீறியத்தை அரசுக்கு புறிய வைக்க இயலவில்லை.இதனால் அரசு நமது சமூகத்தை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், அந்நிய நாட்டு உளவாளிகளாகவும் சித்தறித்து பொய் வழக்குகளை போட்டு அரசியலமைப்பு சாசனத்திற்குஎதிரகா கைதுகளை மேற்கொண்டு நமது சமூகத்தை இழிவு படுத்தி வருகிறது. இது ஒரு திட்டமிடட சதி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இப்படியிருக்கையில் இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் சமூகத்தை இந்த அழிவு பாதையிலிருந்து பாதுகாப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆகவே நாம் இதிலிருந்து விரைவில் விழித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய மிகக் கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு முன்னோட்டமாக உணர்ச்சியும், உற்சாகமும், சிந்திக்கும் திறனும் மிக்க ஆற்றல் மிக்க இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள "இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்" தமிழகமெங்கும் இசுலாமிய இயக்கத் தலைவர்களையும், சமூக ஆர்வளர்களையும், சிந்தனையாளர்களையுமு் திரட்டி பல கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் நடத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இஸ்லாமிய சமூகத்தையும், மக்கள் போராளிகளையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் அரச நாடகத்தையும், நமது மக்களுக்கு எதிராக தொடரும் கைதுகள், பொய் வழக்கு கொடுமைகளையும் கண்டித்து இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர் பிரச்சார இயக்கத்தினை தொடங்கி உள்ளது. இதன முதல் கட்டமாக வரும் 25.11.2012 அன்று திருப்பூர், காங்கேயம் சாலை, வெங்கடேஸ்வரா நகரில் அமைந்துள்ள H.M.S மஹாலில்முதல் அரங்க கூட்டத்தை நடத்துகிறது. இதில் சமுதாயத்தலைவர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், சமூக அக்கறையாளர்களும், வழக்கறிஞர்களும் மனித நேயம் மிக்கவர்களும், மனித உரிமைகளை காக்க போராடுபவர்களுமாக கண்ணியவான்கள் கலந்து உரிமைக்குரல் எழுப்ப உள்ளார்கள்.
வரும் நவம்பர் 25 அன்று திருப்பூர் மாநாகரில் கூடும் அரங்க கூட்டத்தில் நம் தமிழ் சமூக அமைப்புகளின் தலைவர்கள், மனித அரிமை ஆர்வளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளார்கள் இச்சமூக சங்கமிப்பில் நீங்களும் ஒரு அங்கமாய் நின்று இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய குரல் கொடுங்கள், ஜாதி , மத வேறுபாடின்றி உங்களை அழைக்கிறோம், அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைப்போர் இது, நமது சக தோழர்களின் அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுப்போம்!!வாருங்கள் அநீதிக்கெதிரான இந்த களமாடலில் பங்கெடுங்கள் !! பதிவு செய்யுங்கள் உங்களை வரலாற்றின் பக்கங்களில் நீதிக்காக போராடியோர் என்று!!
ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள(போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை.குர்ஆன் (8:53)
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
தொடர்பு : 9488159091 - 9486641586
Subscribe to:
Posts (Atom)